கிளிநொச்சி மாவட்டத்தின் 2025ம் ஆண்டு மூன்றாம் காலாண்டுக்கான ஊராட்சி முற்றக் கலந்துரையாடல் நிகழ்வு இன்று(22.01.2026 )பி.ப 2.00மணிக்கு கிளிநொச்சி மாவட்ட குடிசார் அமைப்புக்களின் சம்மேளனத்தின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றது.
குடிசார் அமைப்புக்களின் சம்மேளன தலைவர் தலைமையில் ஆரம்பமான கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் உதவிச் செயலாளர் ஆகியோரின் இணைத்தலைமையில், மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
கிறிசலிஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன், வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சு மற்றும் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் காலாண்டுக்கு ஒருமுறை தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது.
இன்றைய கூட்டத்தில் கடந்த கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளின் முன்னேற்றங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன.
தொடர்ந்து சமூகத்தில் அடையாளம் காணப்பட்டு இதுவரை தீர்க்கப்படாத பிரச்சனைகள் குறித்து குடிசார் அமைப்புகளின் பிரதிநிதிகள் இன்றைய ஊராட்சி முற்றத்திற்கு முன்வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில், அவற்றிற்கான தீர்வுத் திட்டங்கள் மற்றும் தேவையான ஆலோசனைகள் துறைசார்ந்த திணைக்களத்தலைவர்களால் வழங்கப்பட்டன.
குறிப்பாக போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் புனர்வாழ்வு அளிக்கப்படும் போது அவர்களின் வாழ்வாதாரம் ,சுகாதாரம், கல்வி, காணி, வீதி அபிவிருத்தி, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் மற்றும் பெண்கள், சிறுவர்கள் எதிர்நோக்கும் சவால்கள், அதற்கான உள்ளடங்கலான தீர்வுகள் மற்றும் எதிர்கால செயற்பாடுகளுடன் முன்னோக்கி செல்லுதல் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டன.
இக் கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி), மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், கரைச்சி பிரதேச செயலாளர், உதவி மாவட்ட செயலாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் , பல் துறை சார் அரச உயர் அதிகாரிகள், கிறிசலிஸ் நிறுவன உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் மாவட்ட இணைப்பாளர்கள் , கிளிநொச்சி மாவட்ட குடிசார் அமைப்புக்களின் சம்மேளனத்தின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.





