கிளிநொச்சி மாவட்ட செயலக மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் IOM நிறுவனத்தின் நிதி அனுசரணையில் கிளிநொச்சி மாவட்ட தொழிற்சந்தை.
கிளிநொச்சி மாவட்ட செயலக மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் IOM நிறுவனத்தின் நிதி அனுசரணையில் கிளிநொச்சி மாவட்ட தொழிற்சந்தை 2026 இன்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
குறித்த தொழிற்சந்தையினை மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் ஆரம்பித்து வைத்தார்.
மாவட்டத்தில் தொழில் நாடுவோருக்கு தொழில் ஒன்றைத் தெரிவு செய்வதற்கான அரியதோர் சந்தர்ப்பமாக குறித்த தொழிற்சந்தை அமைந்திருந்தது.
குறித்த தொழிற்சந்தையில் தொழில் வெற்றிடங்களிற்கான ஆட்சேர்த்தல் ,தொழிற்பயிற்சி கற்றல் வழிகாட்டல் போன்ற பல்வேறு வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன.
நிகழ்வு தொடர்பான விளக்கவுரையினை மனிதவலு வேலைவாய்ப்பு பிரிவு மாவட்ட இணைப்பாளர் சி.சிவசொரூபன் நிகழ்த்தினார்.
குறித்த தொழிற்சந்தையில்,தனியார் உற்பத்தி நிறுவனங்கள்,பாதுகாப்புச் சேவை,சந்தைப்படுத்தல் துறை,வெளிநாட்டு வேலைவாய்ப்பு,ஹோட்டல் துறை,காப்புறுதித் துறை,கணக்கியல் துறை,பண்ணை வேலையாட்கள் போன்றவற்றில் காணப்படும் வேலைவாய்ப்பு தொடர்பில் 23 நிறுவனங்கள் கலந்து கொண்டன.
அத்துடன் கணினித்துறை,தாதியர் பயிற்சி நெறி,வெளிநாட்டு வேலைவாய்ப்பு,ஹோட்டல் முகாமைத்துவம் போன்ற தொழிற்பயிற்சி நெறிகள் தொடர்பாக பயிற்சி வழங்கும் 07 நிறுவனங்கள் பங்குபற்றியிருந்தன.
தொழில் தேடுநர்களாக 254 பேர் பதிவு செய்திருந்தனர்.
குறித்த தொழிற்சந்தையில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி), மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள்,IOM நிறுவன மாவட்ட இணைப்பாளர் சலீம் ஜெமீன், திணைக்கள உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர். மாவட்டத்திலுள்ள பல இளைஞர் யுவதிகள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





